வான்னீலம் மறுத்த கறுமேகங்கள். கொட்டுந்நீர் நிற்கா முப்பத்தாறாம் நாள். தலைப்பிரட்டைகளோடு பிறந்த போதிசாத்து.
அவை யட்சய கருமேகங்கள். அதன்கூறறிந்து பேழை கட்டி நிலக்காற்றுயிர்களை காப்பவர்களில்லை. அறிந்த அத்தலைப்பிரட்டை காத்திருந்தது கால்கள் நான்கு வளரும் வரை.
சகளவர்களே... நில்லாதது நீடித்தால் நிலவுயிர் நமத்துவிடும். கரிமேகமிறைத்தவற்றை குடித்து மேலை சேர்த்து பனியாக்கி நிறுத்துவோம்.
தேரைகளனைத்தும் பெருகிய நீருறிஞ்சி பருத்துப் பறந்து மேகடைக்க நின்ற மழை. மேலுமெழும்பாது, பேரூருவங்கொண்ட போதிசாத்து தேரை மேலமர்ந்ததால்.
சகளவர்கள் இறங்கும் போதுதான் இப்போதும் மழை பெய்கிறதாகச் சொல்லும் போதி சாத்துவ தேரைக்கு, ஒற்றைப் பிக்கு இக்கதையைக்கேட்கும் போது வயது 1051.
எவரெவரின் சொற்கள், சுகவீனர்களின் செவிகளை வாசலாக்கி, உதிரக்குழாய்களுக்குள் புகுந்து, பிரபஞ்ச வெளி தாண்டிச் சுழலும் கண்டறியா நிலத்தின் தாதுக்களை அவர்களுடலில் சேர்க்கிறதோ அச்சொற்கள் எல்லாம் திருக்காயவானுடையதே. 🖤
மூன்று மூன்று சொற்களின் காத்திருப்பு. நனவற்று இரத்தம் காய்ந்தொட்டிய இறகினால் எழுதப்படுகிறது. அனைத்து சீவராசிகளும் அவற்றைக் கீறிவைத்திருக்கும். எல்லாவுயிர்க்கும் அவை ஒரே வார்த்தைகளா? இல்லை. மொழியாக எழவைக்கும் அடியுணர் கொதிப்பு ஒன்று. 🖤